ஜல்லிக்கட்டு: மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை! தமிழகத்தின் கடைசி நம்பிக்கையும் வீண்
டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு தயாராக இல்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியிலுள்ள நமது வட்டாரங்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர தயார் இல்லை என்பது தெரியவருகிறது.
கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்து மத்திய அரசு அறிவிக்கைவிட்ட நிலையில் அது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. அதுகுறித்த வழக்கு விசாரமஐ நடந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், அவசர சட்டம் கொண்டு வந்து உச்சநீதிமன்றத்தை மீறி செயல்பட மத்திய அரசு விரும்பவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வெளிவராது என தகவல் வந்துள்ள சூழலில் மத்திய அரசும் கைவிரித்துவிட்டதால், சட்டப்படி ஜல்லிக்கட்டை நடத்த முடியாத சூழலில் தமிழக மக்கள் உள்ளனர்.
ஜல்லிக்கட்டு விசாரணையின்போது, பாரம்பரிய பழக்கம் என்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர மத்திய அரசு சார்பில் வாதம் முன் வைத்தது. குழந்தை திருமணமும் பாரம்பரிய வழக்கமாக இருந்ததுதான், அதற்காக அதையும் அனுமதிக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எனவே நீதிபதிகளின் கருத்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருப்பதாக கருதும் மத்திய அரசு, இதில் அவசர சட்டம் இயற்றி கண்டனம் பெற விரும்பவில்லை என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.