ஜெ.வுக்கு தொண்டர்கள் பரிசுகள் கொடுத்தது சட்டப்பூர்வமானதே- முறைகேடான வருமானம் அல்ல: ஜெ. வக்கீல்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் பரிசுப் பொருட்கள் கொடுத்தது சட்டப்பூர்வமானதுதான்... அதை முறைகேடான வருமானமாக கணக்கிட்டதே சதி என்று மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் இன்று முன்வைத்த இறுதிவாதம்:

கட்சி தொண்டர்களிடம் இருந்து அரசியல் தலைவர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவது தமிழகத்தில் வழக்கமான ஒன்றுதான்.
இப்படி தொண்டர்களிடம் இருந்து பரிசு பெறுவதை எந்த ஒரு சட்டமும் தமிழகத்தில் தடை செய்யவில்லை. தொண்டர்களிடம் இருந்து ஜெயலலிதா பரிசுப் பொருட்கள் பெற்றது சட்டப்பூர்வாமன வருமானமே. இதை முறைகேடான வருமானமாக கருதக் கூடாது.
ஜெயலலிதா பரிசு பொருட்களைப் பெற்றதையெல்லாம் முறைகேடான வருமானமாக கருதியிருப்பது சதிதான்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளேட்டுக்கு சந்தா சேர்ப்பு திட்டமே இல்லை என்பது உண்மை அல்ல. நமது எம்.ஜி.ஆர். நாளேடு 2,250 சந்தாதாரர்களை கொண்டது என்பதை வருமானவரித்துறை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு நாகேஸ்வரராவ் வாதிட்டார்.
இந்த அப்பீல் மனு மீதான விசாரணையில் ஏற்கனவே கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். இன்றுடன் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வராவ் தமது வாதத்தை நிறைவு செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications