ஊரையே கலக்கிய எம்.பி.ஏ படிப்புக்கு வந்த சோதனை.. படித்ததில் பாதி பேருக்கு கூட வேலை கிடைப்பதில்லையாம்
இந்தியா முழுக்க உள்ள கல்லூரிகளில் இருந்து எம்பிஏ படித்து வெளியே வந்த மாணவர்களில் பாதி பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை என்று அதிர்ச்சியான ரிப்போர்ட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
டெல்லி: இந்தியா முழுக்க உள்ள கல்லூரிகளில் இருந்து எம்பிஏ படித்து வெளியே வந்த மாணவர்களில் பாதி பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை என்று அதிர்ச்சியான ரிப்போர்ட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த வேலையில்லா திண்டாட்டம் குறித்த விளக்க அறிக்கையை அகில இந்திய தொழிநுட்ப படிப்புகளுக்கான கழகம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் இருக்கும் எம்பிஏ படித்த பட்டதாரிகளில் இந்த ஒரு வருடத்தில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே வேலைக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாதி பேர் தங்களுக்கு சம்பந்தமான வேலையில் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் எ.ஐ.சி.டி.இ இன்ஜினியரிங் மாணவர்களும் பாதிக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருப்பதாக விரிவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
காலாவதியான எம்பிஏ
சில வருடங்களுக்கும் முன்பு வரை கல்வித் துறையில் டிரெண்ட் செட்டிங் படிப்பாக இருந்தது எம்பிஏ. எந்த படிப்பு படித்து இருந்தாலும் அதற்கு அடுத்து எம்பிஏ படிக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக இந்த படிப்புக்கு மிகவும் மோகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் எம்பிஏ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறைந்து வருகிறது.
பாதி பேருக்கு கிடைக்கவில்லை
இது குறித்து அகில இந்திய தொழிநுட்ப படிப்புகளுக்கான கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி எம்பிஏ படித்தவர்களுக்கு கிடைக்கும் வேலை 50 சதவிகிதத்திற்கும் குறைவாக 47 சதவிகிதமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே இதிலும் வேலை கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் மத்திய அரசில் ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
மிகவும் குறைவு
இந்த குறைந்த வேலைவாய்ப்பு சதவிகிதமானது கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு என்று கூறப்பட்டு இருக்கிறது. 2015ல் 52 சதவிகிதத்தில் இருந்த வேலை வாய்ப்பு இப்போது 47 ஆகி குறைந்து இருக்கிறது. இது கடந்த ஐந்து வருடத்தில் மிகவும் குறைவான வேலை வாய்ப்பாகும். ஒவ்வொரு வருடமும் வெளியே வரும் 200,000 பேரில் 100,000 பேருக்கு கூட வேலை இல்லை என்று தெரிவிக்கப்ட்டு இருக்கிறது.
வேலையின்மைக்கு காரணம் என்ன
இதற்கு காரணமாக இரண்டு விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது. முதல் விஷயமாக நிறுவனங்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நிறுவங்கள் நிறையவே மாறிவிட்டன, அவர்களின் செயல்பாடும் வேலை செய்யம் முறையும் ரொம்பவே மாறிவிட்டது. அதேபோல் இரண்டாவதாக மாணவர்களின் திறமை குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் படித்து வெளியே வந்தால் அதில் பாதி பேர் கூட திறமையாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேலை இல்லா இன்ஜினியரிங் படிப்பு
இதேபோல் இன்ஜினியரிங் படித்துவிட்டு வெளியே வரும் நபர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை நேற்று கூறப்பட்டு இருக்கிறது. அவர்களின் கூற்றுப்படி ஒரு வருடத்தில் சராசரியாக 7 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படித்துவிட்டிடு வெளியேறுவதாகவும். அதில் 3 லட்சம் பேருக்கு கூட சரியான வேலை கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களாகவே இதுதான் நிலைமை என்று கூறப்பட்டுள்ளது.