சிபிஐயிடம் ஒத்துழைக்காத வங்கி ஊழியர்கள்.. நீரவ் மோடி வழக்கில் புதிய சிக்கல்
நீரவ் மோடியின் மோசடி வழக்கு விசாரணையில் வங்கி ஊழியர்கள் யாரும் சிபிஐயிடம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
டெல்லி: நீரவ் மோடியின் மோசடி வழக்கு விசாரணையில் வங்கி ஊழியர்கள் யாரும் சிபிஐயிடம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இவருக்கு நெருக்கமானவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
யாரிடம் விசாரணை
தற்போது நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் கீதாஞ்சலி நிறுவன நிர்வாக இயக்குனர் மெஹுல் சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையின் முன்னாள் மேனஜர் கோகுல்நாத் ஷெட்டி, இன்னும் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பல கோடி கமிஷன்
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து சான்றிதழ் வாங்க மட்டும் பல கோடி பணம் கை மாறி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இங்கிருந்து வெளிநாட்டிற்கு கடிதம் போகும் போது வங்கி ஊழியர்களுக்கு லஞ்சம், கமிஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4-5 வங்கி ஊழியருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முக்கியமான உதவி
முதல்முறை கடிதம் அனுப்பப்பட்ட போது ஹாங்காங்கில் இருக்கும் அலஹாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிளை மூலம் 250 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கடிதத்திலேயே இவ்வளவு பணம் கைமாறியது இதுவே முதல்முறையாகும். மூன்று நாள் விசாரணையில் இந்த தகவல் மட்டுமே சிபிஐக்கு கிடைத்துள்ளது.
யாரும் ஒத்துழைக்கவில்லை
இதற்கு முக்கிய காரணம் யாரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதுதான். எந்த கேள்விக்கும் யாரும் சரியான பதில் அளிக்கவில்லை. கொடுக்கப்படும் கடன் விவரங்களும் சரியாகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.