"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
ஸ்ரீநகர்: "பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதற்கான ஆதாரத்தை மத்திய அரசு இதுவரை காட்டாதது ஏன்?" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு பேசுகையில், திக்விஜய் சிங் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, திகவிஜய் சிங்கின் இந்தக் கருத்து அவரது சொந்தக் கருத்து என்றும், அதற்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர் வந்த வேன் மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தினர். இதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெரியவந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் வான் வழியே நுழைந்த இந்திய ராணுவம், அங்குள்ள தீவிரவாத முகாம்களைக் குண்டு வீசி அழித்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

கேள்வி
எதிரி நாட்டுக்குள் சென்று குறிப்பிட்ட சில இலக்குகளை மட்டுமே அழித்ததால் இது 'துல்லியத் தாக்குதல்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும், அவ்வப்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் இந்த துல்லியத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் பாஜக பொய் கூறுவதாகவும் கூறி வந்தனர்.. இதனால், இந்திய ராணுவத்தை எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதாகவும், ராணுவத்தை இழிவுபடுத்துவதாகவும் பாஜக குற்றம்சாட்டியது. அது முதலாக, துல்லியத் தாக்குதல் குறித்துக் கேள்வியெழுப்புவதை எதிர்க்கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டது.

மீண்டும் வம்பிழுத்த திக்விஜய் சிங்
இந்நிலையில்தான், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீண்டும் இந்த துல்லியத் தாக்குதல் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் திக்விஜய் சிங் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், "தீவிரவாதிகள் அதிகம் இருக்கும் புல்வாமாவில் ஒவ்வொரு வாகனமும் பாதுகாப்புப் படையினரால் சோதனை செய்யப்படும். அப்படியிருக்கையில், தீவிரவாதிகள் வந்த கார் ஏன் சோதனை செய்யப்படவில்லை? இத்தனைக்கும் அந்த கார் தவறான திசையில் வந்திருக்கிறது.

"காங்கிரஸுக்கு சம்பந்தமில்லை"
பாதுகாப்புப் படையினரின் அலட்சியத்தால் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரை நாம் இழந்துவிட்டோம். இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்திவிட்டோம் என பாஜக கூறியது. ஆனால், அதற்கான ஆதாரத்தை நாடாளுமன்றத்திலோ, மக்களிடமோ பாஜக காட்டவில்லை. இன்று வரை அந்த ஆதாரத்தை மத்திய அரசு காட்ட தயங்குவது ஏன்?" என திக்விஜய் சிங் கேள்வியெழுப்பினார். திக்விஜய் சிங்கின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திக்விஜய் சிங் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்றும், அது காங்கிரஸின் கருத்து அல்ல எனவும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications