ராகுல் விமர்சனத்தால் ராஜினாமா செய்யமாட்டேன்: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று ராகுல் விமர்சித்ததால் தமது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
குற்ற வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர தீர்மானித்தது.

அவசர சட்டம்
இந்த அவசர சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காகவும் மத்திய அமைச்சரவை அனுப்பி வைத்தது. இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

சீறிய ராகுல்
இந்த அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி திடீரென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்றும் அதை கிழித்து எறிய வேண்டும் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜினாமா?
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்று இருந்த பிரதமர் மன்மோகன் சிங் அங்கிருந்து நேற்று டெல்லி திரும்பினார்.
வரும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

இருமுறை ஆலோசித்தோமே..
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழப்பதை தடுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. இதுபற்றியும், இது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் காங்கிரஸ் உயர்மட்ட குழுவில் ஆலோசித்தோம். அமைச்சரவை கூட்டத்தில் இரு முறை ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகுதான் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அவசர சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது.

ராகுல் கடிதம்..
இதுபற்றி ராகுல் காந்தி தெரிவித்து இருந்த கருத்துக்களை பார்த்தேன். இந்த பிரச்சினை தொடர்பாக அவர் எனக்கு கடிதமும் எழுதி இருந்தார். ஜனநாயகத்தில் பிரச்சினைகள் கிளப்பப்படும் போது அந்த பிரச்சினைகளை கிளப்பியவர்கள் மனதில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ராகுலை சந்திப்பேன்..
இந்த பிரச்சினை குறித்து ராகுல் காந்தியுடன் பேசுவேன். அவரும் என்னை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ராகுல் காந்தி ஏன் அப்படி பேசினார்? அவர் அப்படி பகிரங்கமாக பேசியதற்கான காரணம் என்ன? என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பேன்.
இந்த பிரச்சினை தொடர்பாக எனது அமைச்சரவை சகாக்களுடனும் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய நம்பிக்கையை பெறுவேன். எந்த திசையில் காற்று வீசுகிறது என்று பார்ப்போம்.

அவ்ளோ சீக்கிரம் நிலைகுலைய மாட்டேன்..
நான் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தவன். என்னை அவ்வளவு எளிதில் நிலைகுலையச் செய்து விட முடியாது.

ராஜினாமா செய்யமாட்டேன்...
இந்த பிரச்சினைக்காக பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications