ஆம் ஆத்மி கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறும் எண்ணமில்லை: காங்கிரஸ் உறுதி
டெல்லி: ஆட்சி அமைக்க ஆம் ஆத்மிக்கு அளிக்கப் பட்டுள்ள ஆதரவு உறுதியானது, மறுபரீசீலனை செய்யத் தேவையில்லை என காங்கிரஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு வரும் சனிக்கிழமை ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப் படும் என ஆம் ஆத்மி அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு உண்டானது. காங்கிரசார் சிலர், டெல்லி மாநில காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மிக்கு அளிக்கப் பட்டுள்ள ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெறக் கூடும் என்ற செய்தி பரவியது.
இந்நிலையில்,ஆம் ஆத்மி கட்சிக்கு அளித்த ஆதரவு குறித்து மறு பரீசீலனை செய்ய போவதில்லை என காங்கிரஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications