சுனந்தா புஷ்கர் தற்கொலைதான் செய்து கொண்டார்.. டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டுதான் மரணம் அடைந்தார், அவரது மரணத்தில் யாரும் குற்றவாளிகள் கிடையாது என்று என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டுதான் மரணம் அடைந்தார், அவரது மரணத்தில் யாரும் குற்றவாளிகள் கிடையாது என்று என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான ஒரு வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிஸ்டானி மற்றும் சந்தர் சேகர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் டெல்லி போலீஸ் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ராகுல் மெர்ஹா, தாக்கல் செய்த அறிக்கையில் சுனந்தாவின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இதனிடையே தன்னையும் இந்த வழக்கில் வாதியாக இணைக்க வேண்டும் என்று சுனந்தாவின் மகன் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது வழக்கில் புதிய திருப்பமாக சுனந்தா புஷ்கர் மர்ம மரண பற்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசி தரூர் பெயரும் குற்றப்பத்திரிகையில் உள்ளது. டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறியுள்ளனர். 4 வருட விசாரணைக்குப் பின் சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு தற்கொலைதான் காரணம் என்று கூறியுள்ளனர். இந்த மரண வழக்கில் குற்றவாளிகள் என்று யாரையும் குறிப்பிட முடியாது என்றும் கூறியுள்ளனர். மருத்துவ அறிக்கையின் படி இது தற்கொலைதான் என்று அவர்கள் முடிவிற்கு வந்துள்ளனர்.
ஆனால் இந்த குற்றப்பத்திரிக்கையின் இரண்டாம் பக்கத்திற்கு பின்புதான் சசிதரூர் பெயர் இடம்பெற்று இருக்கிறது. அவருக்கு இந்த மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், சசிதரூர் சுனந்தா புஷ்கரை கொடுமைப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சசி தரூரால் சுனந்தா புஷ்கர் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதற்கான ஆதாரம் இருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.