மம்தாவை ஒழித்துகட்ட நினைக்கிறார்கள்... இதற்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார்.. திரிணாமுல் பதிலடி
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறை இல்லை என்றும் இதெல்லாம் அவரை அமைதியாக்காது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக சார்பில் அவரை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
வேட்பு மனு தாக்குதல் செய்த கையோடு நேற்று நந்திகிராம் தொகுதியில் தனது பிரசாரத்தையும் மம்தா பானர்ஜி தொடங்கினார். சுவேந்து அதிகாரி அப்பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால், மம்தாவுக்கு கடும் போட்டுக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தா மீது தாக்குதல்
இந்நிலையில் நேற்று மாலை சிலர் தன்னை தாக்கியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை மம்தா பானர்ஜி முன்வைத்தார். 4 அல்லது 5 பேர் தன்னை சூழ்ந்துகொண்டதாகவும், தன்னை கார் மேல் தள்ளவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒடுக்க முடியாது
இது குறித்த திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மம்தா பானர்ஜியை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, விவசாயிகளின் போராட்டத்தில் அவர்களுடன் துணை நின்றதற்காக அவர் தாக்கப்பட்டார். ஆனால் எதுவும் அவருடைய லட்சியத்தைப் பாதிக்காது. அன்றும், இன்றும், என்றும் அவர் மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையெழுத்து இயக்கம்
மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தேர்தல் அறிக்கை வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது காலில் ஏற்பட்டுள்ள வீக்கத்திற்குச் சிகிச்சை பெற்று வரும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கியுள்ளது. சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கவுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், பாஜகவும் காங்கிரசும் மக்களின் அனுதாபத்தைப் பெற மம்தா நடத்திய நாடகம் இது என்று விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications