தர ஆய்வில் மேகி நூடுல்ஸை அடுத்து உடைந்த டெட்டால் சோப்பின் குட்டு
ஆக்ரா: மேகி நூடுல்ஸை அடுத்து டெட்டால் குளியல் சோப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் மேகி நூடுல்ஸுக்கு உணவு பாதுக்காப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது.
இந்நிலையில் ரெக்கிட் பென்கிசர்(இந்தியா) நிறுவன தயாரிப்பான டெட்டால் குளியல் சோப்பு மற்றும் 10 மருந்துகளின் தரத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சோதனை செய்தது. அதில் டெட்டால் சோப்பு மற்றும் 10 மருந்துகளின் தரம் சரியில்லை என தெரிய வந்துள்ளது.
டெட்டால், டிங்க்ச்சர் மற்றும் 9 மருந்துகளின் மாதிரிகளை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேகரித்து அதை ஆய்வுக்காக லக்னோவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த ஆய்வில் தான் டெட்டால் சோப்பின் தரம் பற்றி தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆக்ரா மருந்து இன்ஸ்பெக்டர் ஆர்.சி. யாதவ் கூறுகையில்,
நாங்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட டெட்டால் சோப்பின் கவரில் 125 கிராம் என எடையை குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் ஆய்வில் அதன் எடை 117.0470 கிராம் என்பது தெரிய வந்தது. அந்த சோப்பு உரிமம் இல்லாமல் கடையை நடத்தி வந்த சந்தோஷ் குமார் வால்மிகியிடம் இருந்து வாங்கப்பட்டது.
ஆய்வில் சோப்பின் தரம் மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.