பொங்கலுக்கு கட்டாய விடுமுறை… தமிழகத்தின் கொந்தளிப்புக்கு பணிந்தது மத்திய அரசு
பொங்கல் திருவிழாவிற்கு விரும்ப விடுமுறை என்று நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்ததையடுத்து பாஜக அரசு பணிந்தது.
டெல்லி: பொங்கல் விடுமுறையை விருப்பப் பட்டியலில் இருந்து கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்தியில் ஆளும் பாஜக அரசு பணிந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பொங்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், நேற்று மாலை மத்தியில் ஆளும் பாஜக அரசு பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் கிளம்பியது.
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக முதல் அனைத்துக் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வகையில் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் செய்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன.
இதுதவிர, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இதுதொடர்பான கடிதத்தை இன்று காலை அனுப்பி இருந்தார்.
பொங்கலுக்கு கட்டாய விடுமுறை… தமிழகத்தின் கொந்தளிப்புக்கு பணிந்தது மத்திய அரசு pic.twitter.com/1wtiNDa9eg
— Oneindia Tamil (@thatsTamil) January 10, 2017
தமிழகத்தில் இருந்து இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே பாஜக அரசு இதனைத் செய்தது. கட்டாய விடுமுறைத் தொடர்பாக, பாஜக அரசின் சார்பாக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மீது வழக்கம் போல பழியைப் போடும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இது எதுவும் எடுபடவில்லை என்ற சூழலில் பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துவிட்டு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வரும் 28ம் தேதி கொண்டாடப்படும் தசரா பண்டிகையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையை வைத்துள்ளது மத்திய அரசு. இது உண்மையில் தமிழக இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.