பார்ட்டியில் தகராறு: டெல்லியில் என்.ஆர்.ஐ. வாலிபர் நண்பர்களால் அடித்துக் கொலை
டெல்லி: டெல்லியில் வெளிநாடு வாழ் இந்தியரான அன்மோல் சர்னா தனது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் வெளிநாடு வாழ் இந்தியரான அன்மோல் சர்னா(20). அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் உள்ள கல்காஜி பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். ஹோட்டல் நிர்வாகம் குறித்த படிப்பு படிக்க அவர் அடுத்த மாதம் கனடா செல்லவிருந்தார்.
இந்நிலையில் கல்காஜி பகுதியில் உள்ள சவுத் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பரின் வீட்டில் நடந்த பார்ட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அவர் சென்றார். பார்ட்டியில் நடந்த தகராறில் நள்ளிரவு 12.30 மணி அளவில் அவர் நண்பர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அன்மோல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனே அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அன்மோலின் நண்பர்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அன்மோலின் தந்தை கூறுகையில்,
நான் மருத்துவமனையை அடைந்தபோது என் மகன் இறந்துவிட்டான். அவனை படுமோசமாக தாக்கியுள்ளனர். கட்டையால் அவன் தலையை சிதைத்துள்ளனர். என் மகனை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என்றார்.