வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க 'இ-வோட்' அவசியம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தல்களில் வாக்களிக்க ஏதுவாக 'இ வோட்' முறையை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் அவர்கள் வாழும் நாட்டில் இருந்தபடியே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாட்டை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தின் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 8 வாரத்துக்குள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஏதுவாக இ வோட் முறையை நடமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக விசாரணையின் போது, வெளிநாட்டில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் இணையம் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இ வோட் என்றால் என்ன?
தபால் மூலமான வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு வெளிநாடு வாழ் இந்திய வாக்காளரின் இ மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் எந்த வேட்பாளரை ஆதரிக்கிறார் என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட தொகுதி அலுவலருக்கு மின் அஞ்சலில் தெரிவிப்பார். இதுதான் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த பரிந்துரை.
மேலும் வாக்குரிமை உள்ள ஒருவர் வாக்களிக்க முடியாத நிலையில் அவருக்கு பதில், மற்றொருவர் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.