இவங்களுக்கு இதே வேலையா போச்சு.. தொடர்கிறது ஓ.பி.எஸ்-சசிகலா கடித யுத்தம்
நேற்றுமுன்தினம் முதல்வர் பன்னீர்செல்வம், மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் என்ற வகையில் சசிகலாவும் மோடிக்கு அதே கோரிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடுவே போட்டா போட்டி நடந்து வருகிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
மோடிக்கு கடிதம் எழுதும் விவகாரங்களில் இந்த தலைமைகள் நடுவேயான போட்டா போட்டி வெளிப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதினார்.-
ஜெகதாம்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறித்த கடிதம் அது. இலங்கைச் சிறைகளில் உள்ள 61 மீனவர்கள் மற்றும் 116 படகுகள் ஆகியவற்றை உடனடியாக அந்நாட்டு அரசு விடுவிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

கடிதப்போர்
இதைத்தொடர்ந்து அன்றைய தினமே, இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் என்ற வகையில், சசிகலாவும் கடிதம் எழுதினார். இரு கடிதங்களுமே ஒரே பொருளை சுட்டிக்காட்டுவதாகவே இருந்தன.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
இந்நிலையில் மறுநாளே அதேபோன்ற சம்பவம் அரங்கேறியது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு சிறப்பு தபால் தலை மற்றும் நாணயம் வெளியிட வேண்டும் என்று மோடிக்கு, முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதிய சில மணி நேரங்களுக்குள்ளாக இதே கோரிக்கையுடன் சசிகலாவும், மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜல்லிக்கட்டு
சில நாட்கள் ஓய்ந்திருந்த கடிதப்போர் இப்போது மீண்டும் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நேற்றுமுன்தினம் முதல்வர் பன்னீர்செல்வம், மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் என்ற வகையில் சசிகலாவும் மோடிக்கு அதே கோரிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளார்.
காட்சிப் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஜெயலலிதா
அதிமுகவின் பொதுச்செயலாளராக, தனது மறைவு வரை ஜெயலலிதாவே பதவிவகித்து வந்தார். இதனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக, அவர் பிரதமருக்கு கடிதம் எழுதும்போதெல்லாம், ஒரு அறிக்கையோடு விஷயம் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications