இந்தியா வரும் ஒபாமாவுக்கு மூன்று கட்ட சோதனைகளுக்கு பிறகே சாப்பாடு! பாதுகாப்பால் படாதபாடு!!
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவில் சாப்பிட உள்ள உணவு, தண்ணீர் போன்றவை மூன்று கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஒரு வாய் சாப்பாட்டை எடுத்து வைக்கும் முன்பாக ஒபாமாவை படாதபாடு படுத்தப்போகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள் என்பது இதன் மூலம் நன்கு தெரிகிறது.
இந்திய குடியரசு தின விழாவிற்கான சிறப்பு அழைப்பாளராக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிட்சேலுடன் வரும் 25ம்தேதி, அதிகாலை, இந்தியா வருகிறார். அவர் டெல்லியில் ஐடிசி மவுரியா ஹோட்டலில் தங்க உள்ளார்.
இந்திய உணவுகள்
இந்திய பாரம்பரிய உணவுகளை ஒபாமாவுக்கு அளித்து அசத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதால், பல மெனுக்களில் உணவு தயாராக உள்ளதாம். அதோடு, ஒபாமாவுக்கு பிடித்தமான அமெரிக்க, ஐரோப்பிய உணவுகளும் வழங்கப்பட உள்ளது.
பாதுகாப்போடு உபசரிப்பு
உபசரிப்பு ஒருபக்கம் என்றால், உணவு அல்லது குடிநீர் வழியாக, ஒபாமாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையாக உள்ளன.
மூன்று கட்ட சோதனை
அதிநவீன ஆடம்பர ஹோட்டல் என்று அழைக்கப்படும் ஐடிசி மவுரியாவில், உணவு சோதனைக்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு பிறகு, டெல்லி போலீஸ் படையின் ஒரு குழு, உணவை சோதிக்கும். மூன்றாவதாக அமெரிக்காவிலிருந்து வந்துள்ள ரகசிய ஏஜென்டுகள் உணவை சோதிப்பார்கள். இவ்வாறு மூன்று கட்ட சோதனைகளுக்கு பிறகே ஒபாமா நிம்மதியாக வாயில் சாப்பாட்டை வைக்க முடியும்.
கால் மணி நேரம் சோதனை
தண்ணீரும் இதேபோன்ற சோதனைகளுக்கு பிறகே ஒபாமா கைகளுக்கு சென்று சேரும். உணவு தயாரிக்கப்பட்ட பிறகு இந்த மூன்று கட்ட சோதனைகளுக்காக மட்டும் கால் மணிநேரம் செலவாகும். ஒருமுறை சோதனை நடத்தப்பட்டுவிட்ட பிறகு, அந்த உணவின் அருகே கூட போக வேறு யாருக்கும் அனுமதி தரப்படாது.