அங்கே என்ன கூட்டம்!? ஜனாதிபதி மாளிகையில் எட்டிப்பார்த்த நாய்!!: துரத்தி பிடித்த போலீஸ்
டெல்லி: ஒபாமா வர்றார்... ஒபாமா வர்றார்... என இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்க... டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் எறும்பு கூட எட்டிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தெரு நாய் ஒன்று கடும் பாதுகாப்பையும் மீறி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஹாயாக வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் 66 வது குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வருகை தந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒபாமா வர இருந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக அந்த வளாகத்துக்குள் திடீரென்று தெரு நாய் ஒன்று நுழைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நாயை துரத்தினார்கள். அது அங்கும் இங்குமாக ஓடியது. கையில் சிக்காமல் போக்கு காட்டியது. என்றாலும் தீவிரமாக போராடி ஒருவழியாக நாயை பிடித்து வெளியே நிறுத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள்.
ஒபாமாவின் வருகையை யொட்டி, டெல்லியில் குரங்குகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
குரங்கு பிடிப்பவர்களும், நாய் பிடிப்பவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். என்றாலும் பலத்த பாதுகாப்பையும் மீறி அழையா விருந்தாளியாக குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்திற்குள் நாய் நுழைந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications