ரயில் விபத்து: புதரில் இருந்து கேட்ட சத்தம்.. 48 மணி நேரம் கழித்து உயிருடன் பயணி மீட்பு.. நெகிழ்ச்சி
புவனேஷ்வர்: ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 48 மணி நேரம் கழித்து பயணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பது மீட்புக்குழுவினருக்கு நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வழக்கம் போல் ஷாலிமரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்து இருந்தனர்.

இந்த ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டது. அதே நேரத்தில் பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் கோரமண்டல் மீது மோதியது. சில நொடிகளில் 3 ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் உருக்குலைந்தன. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 278 பேர் பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
புதரில் இருந்து கேட்ட சத்தம்: இந்த ரயில் விபத்தை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. ரயில் பெட்டிகள் மோதிய வேகத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக மோதி உருக்குலைந்தன. இதனால் உயிரிழந்த பல பயணிகளை அடையாளம் கூட காண முடியவில்லை. அந்த அளவுக்கு உடல்கள் சிதைந்து போயிருந்தன. காயம் அடைந்தவர்களும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டன. விடிய விடிய மீட்பு பணிகள் கிட்டதட்ட 2 நாட்களாக நடைபெற்றது.
இனி யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே மறு சீரமைப்பு பணிகளை தொடங்கலாம் என தேசிய பேரிடர் மீட்புக் குழு ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்து அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. மீட்புக்குழுவை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் உருக்குலைந்து கிடந்த பெட்டிகளை இயந்திரங்கள் மூலம் டிரில் செய்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசாருக்கு திடீரென ஒரு சத்தம் கேட்டது.
மிகவும் சோர்வாக அந்தக் குரல் இருந்தது. உடனே உன்னிப்பாக கவனித்த போலீசார் எங்கிருந்து அந்தக்குரல் வருகிறது என கவனித்து அதை நோக்கி சென்றனர். அப்போது கவிழ்ந்து கிடந்த ஒரு பெட்டிக்கு அருகே இருந்த புதருக்குள் இருந்து ஒலி கேட்டது. உடனே ஓடிச்சென்ற போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர். அங்கிருந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பொதுப்பெட்டியில் பயணம் செய்துள்ளார்: விபத்து நடைபெற்ற 48 மணி நேரம் கழித்து பயணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டது மீட்பு பணியில் இருந்தவர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் பெட்டி மோதும் போது அந்த பயணி புதருக்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 48 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட அந்த பயணி அசாமை சேர்ந்த துலால் மச்சும்தார் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ரயிலின் பொதுப்பெட்டியில் தனது நண்பர்கள் 5 பேருடன் பயணம் செய்துள்ளார். இந்த 5 பேரும் உயிர் பிழைத்தனரா அல்லது காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார்களா? என்ற விவரம் தெரியவில்லை. விபத்து நடைபெற்று 48 மணி நேரம் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்பட்டது உண்மையிலேயெ அதிசயம் தான் என்று மருத்துவர் சுபாஜித் கிரி தெரிவித்தார்.
திங்கள் கிழமை புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மசும்தார், தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தின் அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை எனவும் சுய நினைவு இன்றி பேசி வருகிறார் எனவும் தொடர்ந்து அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications