தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான அதிகாரி.. குடும்பத்தினருக்கு நேரில் சென்று அமித் ஷா ஆறுதல்
ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா அரசு முறை பயணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இரு நாட்கள் பயணமாக ஜம்முவிற்கு சென்றுள்ள அவர், மாநிலத்தில் நிலவி வரும் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
பாஜக தேசிய தலைவரான அமித் ஷா கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மத்திய உள்துறை அமைச்சரான பின்னர் முதல் அரசு முறை பயணமாக அவர் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார்.
காஷ்மீருக்கு சென்ற அமித்ஷாவிற்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், அவரது ஆலோசகர்கள் மற்றும் உயரதிகாரிகள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த பயணத்தின் ஒருகட்டமாக, அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் அனந்த்னாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஜூன் 12-ம் தேதி உயிரிழந்த காவல்துறை அதிகாரி அர்ஷத் அகமது கான் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமித் ஷா.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையில், அமித் ஷா பால்கார்டன் பகுதியில் வசித்து வரும் அர்ஷத் அகமது கான் குடும்பத்தை சந்தித்தார்.
Visited the home of inspector Arshad Khan, SHO Anantnag in Srinagar, who was martyred in a terror attack & offered my condolences to the bereaved family.
— Amit Shah (@AmitShah) June 27, 2019
His sacrifice for the security of our nation has saved many lives. Entire nation is proud of Arshad Khan‘s valour & courage. pic.twitter.com/eByqlVubo6
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையால பால்கார்டன் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அதிகாரி அர்ஷத் அகமதுவின் 4 வயது மகன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த, ரூ80,000 கோடி மதிப்பிலான பிரதமரின் மேம்பாட்டு தொகுப்பு உள்ளிட்ட வளர்ச்சி பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
2-ம் நாளான இன்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்குடன் அமித்ஷா சந்திப்பு நடத்தினார். மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநரோடு அமித்ஷா தீவிர ஆலோசனைக் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.