பேஸ்புக் ஆரம்பிச்சதே 2004ல்தான்... நல்லா விடுறீங்க பாஸ் 'கப்சா'.. மோடியை வாரிய உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: சமூக வலைதளத்தை தனது முக்கிய தளமாக வரித்துக் கொண்ட சமயத்தில், நான் முதல்வராக வருவேன் என்றோ பிரதமராவேன் என்றோ கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்று அமெரிக்காவில் வைத்து பிரதமர் மோடி கூறியதற்கு மோடி கப்சா அடிக்கிறார் என்று கூறி விமர்சித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா.
அவர் "வரித்து"க் கொண்டதாக கூறப்பட்ட காலகட்டத்தில் பேஸ்புக்கும் வரவில்லை, டிவிட்டரும் வரவில்லை என்று அவர் டிவிட்டரில் கிண்டலடித்துள்ளார் மோடியை.
அமெரிக்க பயணத்தின்போது மோடி கூறிய இந்த கருத்துக்கள் சமூக வலைதளத்தில் கிண்டலுக்குள்ளாகியுள்ளன. இப்போது இதில் உமர் அப்துல்லாவும் இணைந்துள்ளார்.
I wondered that as well. He became CM in 2002. Facebook started in '04 & Twitter in '06 so must be another platform. https://t.co/4kugpBAYvT
— Omar Abdullah (@abdullah_omar) September 29, 2015
இதுகுறித்து உமர் அப்துல்லா தனது டிவிட்டில், அவர் 2002ல் முதல்வர் ஆனார். பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டதோ 2004ல்தான். டிவிட்டர் வந்தது 2006ல். எனவே அவர் எப்படி இதில் பயணித்திருக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு பேஸ்புக் நிறுவனர் மார்க்குடன் பேசும்போதுதான் இப்படிக் கருத்தை வெளியிட்டிருந்தார் மோடி.
மார்க்கிடம் பேசும்போது தனது தாய் பற்றி நினைவு கூர்ந்து அவர் பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார். மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய மோடி முழுக்க முழுக்க இந்தியிலேயே பேசினார்.
அந்த பேச்சின்போதுதான் சமூக வலைதளத்தை நான் வரித்துக் கொண்டபோது, முதல்வர் ஆவேன் என்றோ, பிரதமர் ஆவேன் என்றோ நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார் மோடி.