"வாக்களித்தால்.. ரிஸ்க் உங்களுடையது தான்" பாஜக ஆதரவாளர்களை மிரட்டும் திரிணாமுல் எம்எல்ஏ! பரபர வீடியோ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜக ஆதரவாளர்களை திரிணாமுல் எம்எல்ஏ வெளிப்படையாக மிரட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அசன்சோல் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக இங்கு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது.
இப்போது அங்கு இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில், திரிணாமுல் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக ஆதரவாளர்களை திரிணாமுல் எம்எல்ஏ வெளிப்படையாக மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

பாஜக
இந்த வீடியோவை பாஜகவின் மூத்த தலைவர்கள், பாஜக ஐடி செல் தலைவர் அமித் மாளவியா, மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி எனப் பலரும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் திரிணாமுல் கட்சியின் பாண்டபேஸ்வர் எம்எல்ஏ நரேன் சக்ரவர்த்தி, "நீங்கள் வாக்களித்தால், அதன் பின்னர் எங்கு இருப்பீர்கள் என்பதை உணர்ந்து.. அதன் பின்னர் வாக்களியுங்கள். கடுமையான பாஜக ஆதரவாளர்களின் மனதை மாற்ற முடியாது. அதற்குப் பதிலாக அவர்களை அச்சுறுத்த வேண்டும்.

மிரட்டல்
பாஜகவுக்கு வாக்களிக்கும் நபர்களிடம் சொல்லுங்கள். பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்பினால், அவர்கள் தங்கள் சொந்த ரிஸ்கில் வாக்களிக்க வேண்டும். கடுமையான பாஜக ஆதரவாளர்கள் வாக்களிக்காமல் இருங்கள். அப்போது தான் நீங்கள் எங்களை ஆதரிப்பதாகக் கருதுவோம். அப்போது உங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வராது. நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம்" என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சுவேந்து அதிகாரி
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, "இத்தகைய குற்றவாளிகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள். ஆனால் மம்தா பானர்ஜி அவர்களை ஆதரிக்கிறார். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார். திரிணாமுல் கட்சியின் நரேன் சக்ரவர்த்தி இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. அவர் ஏற்கனவே கடந்த 2016இல் உரிமம் இல்லாத துப்பாக்கி உடன் வந்தாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2019 தேர்தல்
அதேநேரம் இந்தச் சம்பவம் தொடர்பாக திரிணாமுல் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த 2019இல் அசன்சோல் மக்களவை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான பாபுல் சுப்ரியோ பாஜகவில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அவர் சமீபத்தில் தான் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில் இணைந்தார். இதனால் அசன்சோல் தொகுதி காலியானதைத் தொடர்ந்து இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications