“பாயிண்ட்” கிடைச்சாச்சு.. உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. அது என்ன இடம்? அடுத்து என்ன நடக்கும்? விரிவாக காணலாம்.
இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்து இருக்கிறது சில்க்யாரா சுரங்கம். இமயமலையை ஒட்டிய பகுதியில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கம் இடிந்து விழுந்து அதை வழி அடைபட்டது. இதன் காரணமாக 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கித் தவிக்கின்றனர். 10 நாட்களுக்கும் மேலாக அவர்கள் சுரங்கத்திற்கு உள்ளேயே உயிருக்கு போராடி வருகின்றனர்.

அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என ஏராளமான வீரர்கள் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மொத்த அரசு நிர்வாகமும் அங்கு திரண்டு உள்ளது. ஏராளமான ஊடங்கள் அங்கு சென்று நேரடி கள நிலவரங்களை வெளியிட்டு வருகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் உத்தரகண்ட் சுரங்கத்தின் மீதே உள்ளது.
உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரகண்ட் முதலமைச்சர் தாமியிடம் நேற்று 2 வது நாளாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மீட்பு விபரங்களை கேட்டறிந்தார். தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் அறிவுறுத்தியதாக தாமி தெரிவித்து உள்ளார்.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Location has been identified for vertical drilling to bring out 41 workers trapped inside Silkyara Tunnel.
— ANI (@ANI) November 22, 2023
A part of the Silkyara tunnel collapsed in Uttarkashi on November 12. pic.twitter.com/EPYq0eEBNE
10 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கியவர்கள் சாப்பாடு, தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கவும் அவா்களைத் தொடா்பு கொள்ளவும் 4 அங்குல அளவிலான குழாய் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த திங்கள் அன்று 53 மீட்டா் தொலைவு கொண்ட கடும் இடிபாடுகளுக்கு மத்தியில் 6 அங்குல குழாய் செலுத்தப்பட்டது. இதன் வாயிலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலாளா்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தக் குழாய் வழியாக எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு, சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் இருக்கும் வீடியோ காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், வேறு வழிகளில் தொழிலாளர்களை மீட்க முடிவு செய்த மீட்புப் பணியினர் செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்தனர். இதற்கு ஏற்ற இடத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் அந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications