என்ட அம்மே.. அரசு அலுவலகங்களில் ஓணம் கொண்டாட தடை... கேரள அரசு அதிரடி உத்தரவு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு அம்மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளான "திருவோணம்' பண்டிகைக்கான இந்த ஆண்டு கொண்டாட்டம் வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கேரள மக்கள் உற்சாகமாக செய்து வருகின்றனர். ஓணம் பண்டிகையின்போது, பல வண்ண மலர்களில், அத்தப்பூ என்ற 'பூக்கோலம்' போட்டு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர்.
பத்து நாட்கள் நடக்கும் இந்த பண்டிகையின்போது அரசு அலுவலகங்கள், வீடுகள், கோயில்கள் என அனைத்து இடங்களும் பூக்கோலங்களால் அலங்கரிக்கபடுவது வழக்கம்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கேரள தலைமைச் செயலர் எஸ்.எம்.விஜய் ஆனந்த் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலக பணி நேரங்களில் ஓணம் உள்பட எந்தவொரு பண்டிகையையும் கொண்டாடக் கூடாது. அலுவலக பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக் கூடாது. அனைத்துத் துறைகளின் தலைவர்களும் அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.