பாக். அட்டூழியம்! நேற்று கண்ணிவெடித் தாக்குதல்- இந்திய வீரர் பலி- இன்றும் துப்பாக்கிச் சூடு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் நேற்று நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தார். இன்றும் பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பாகிஸ்தான்.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நேற்று காலை ராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய வீரர்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில், இந்திய ஜவான் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் உயிரிழந்த இந்திய வீரர் ஷெபாய் சங்கர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
2வது நாளாக தாக்குதல்
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை நடத்தினர்.
எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டம், பாலகோட், சவேலா காலி, கங்கா காலி, ரஜோரி பகுதிகளில் இன்று காலை 07.30 முதல் 8 மணி அளவில் இந்திய பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக எல்லையில். பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
உமர் அப்துல்லா கண்டனம்
பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதலுக்கு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இன்று தாக்குதல் நடத்திய பகுதி, அப்பாவி பொதுமக்கள் வாழும் பகுதி என்றும், இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்திய ராணுவத்தினரின் உடனடி முயற்சியால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக, அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகள் ஊடுவல்
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி, இந்திய வீரர்களின் கவனத்தை திசைதிருப்பி ஊடுருவல் முயற்சியில் ஈடுபடுவதாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications