உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக தலைவர் சுட்டுக்கொலை
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்புதான் பாஜக தலைவர் ஒருவர் அம்மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தொடரும் அரசியல் கொலைகளால் அம்மாநில பாஜகவினர் அச்சத்திலுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின், முசாபர்நகர் மாவட்டம் மிராப்பூர் நகரத்தின் பாஜக துணை தலைவராக இருந்தவர் ஓம்வீர் (40). இன்று காலை தனது வீட்டில் இருந்து தோட்டத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். பைக்கில் வந்த 2 கொலையாளிகள் ஓம்வீரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டுகள் உடலில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஓம்வீர் அதே இடத்தில் பலியானார். முன்னதாக தனது பாதுகாப்புக்கு வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கொலையாளிகளை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் கொலையாளிகள் தப்பிவிட்டதாக தெரிகிறது.
கடந்த இருதினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் விஜய் பண்டிட் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தனர். இந்நிலையில் இன்று மற்றொரு உள்ளூர் பாஜக தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது உ.பி பாஜகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.