ராஜஸ்தான்: தொடரும் 'கோட்டா' துயரம்- மேலும் ஒரு 'நீட்' மாணவர் தற்கொலை- ஒரே ஆண்டில் 28-வது மரணம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கோட்டாவில் மட்டும் இந்த ஆண்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட 28-வது உயிரிழப்பு இது.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக அனைத்து மாநில மாணவர்களுக்குமான ஒரே பொது நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. இது மாநிலங்களின் உரிமை சார்ந்தது. இந்த மாநில பாடத் திட்டங்களில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவம் படித்து வந்தனர்.

ஆனால் அகில இந்திய அளவில் நீட் பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையிலானது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் படிக்காத மாநிலங்களின் பாடத் திட்டத்தை படித்த மாணவர்களால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத நிலை இயல்பாகவே உருவாகிறது. இதனால் நாட்டின் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போகிறது. இந்த துயரம் தாங்காமல் தமிழ்நாட்டின் அனிதா தொடங்கி ஏராளமான இளம் பிஞ்சுகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தர வேண்டும் என்பது தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் நிலை.
இன்னொரு பக்கம், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரமானது நீட் உள்ளிட்ட பல்வேறு பொது தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக இருக்கிறது. கோட்டா நகரத்தில் தெருவுக்கு தெரு ஏராளமான நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இந்த கோட்டா நீட் பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் செலவழித்து பிள்ளைகளை சேர்த்துவிட்டாலே போதும் மருத்துவ படிப்பு கனவு கிடைத்துவிடும் என நம்புகின்றனர் பெற்றோர். ஆனால் கோட்டா பயிற்சி மையங்களின் அதீத கட்டுப்பாடுகள், நீட் தேர்வு குறித்த அச்சம் ஆகியவை மாணவர்களின் உயிர்களை அடுத்தடுத்து காவு வாங்கி வருகின்றன.
தற்போது கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த ஃபக்ருதீன் ஹூசைன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோட்டா நகரின் வக்ஃப் நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஃபக்ருதீன் ஹூசைன் தற்கொலை செய்து கொண்டார். கோட்டா நகரில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட 28-வது மாணவர் ஃபக்ருதீன்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல! உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications