ஜம்மு காஷ்மீரில் ஷாக்.. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மேலும் ஒரு வீரர் உயிரிழப்பு
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது மாயமான ராணுவ வீரர் உயிரிழந்து விட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த இப்பகுதியில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும், ரோந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இங்கு அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், நம் ராணுவ வீரர்கள் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெறும்.

இந்த நிலையில் நேற்று முன் தினம், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அனந்த்நாக் மாவட்டம் கோகெர்நாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே நீடித்த இந்த தாக்குதலில் நம் வீரர்கள் மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.
அதில் ஒருவர் ராணுவ கர்னல் மன்பிரீத் சிங். மற்றொருவர் மேஜர் ஆஷிஷ். இவர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காஷ்மீர் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட்டும் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளார். ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்ட்டர் 3-வது நாளை எட்டியுள்ள நிலையில், பயங்கரவாதிகளின் பதுங்கிடத்தைக் கண்டறிய ட்ரோன்களை ராணுவம் களமிறக்கியிருக்கிறது.
அதுமட்டும் இன்றி ட்ரோன் தகவல்களின்படி பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியும் வருகிறது. இதனிடையே, அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். நேற்று முதல் ராணுவ வீரர் மாயமாகியிருந்த நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில், அனந்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது ராணுவ வீரர் உயிரிழந்து இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அனந்தநாக்கில் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்குகள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நீடித்தது. இந்த நிலையில், தான் மேலும் ஒரு வீரர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications