ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம்... பீகார் தேர்தலுக்குப் பின் அரசிதழில் வெளியாகும்: மனோகர் பரிக்கர்
டெல்லி: ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் போர்ராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 135-வது நாளை எட்டியுள்ளது.
ராணுவத்தில் ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை அமல்படுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து, கடந்த மாதம் 5-ந் தேதி ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பீகார் தேர்தல் முடிந்ததும் அரசிதழில் இதனை வெளியிடுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மத்திய அரசு அறிவித்தத் திட்டத்தில் 7 குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதிகள் சுட்டிக் காட்டினர். அதை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனையடுத்து, முன்னாள் ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 135-வது நாளாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, முன்னாள் ராணுவ அதிகாரிகள் தங்கள் கோரிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் 200-க்கும் அதிகமான ராணுவ அதிகாரிகள் தங்களது ரத்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசிதழில் அறிவிப்பாக வெளிட தாமதம் ஆனது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல்கள் முடிந்த பின்னர் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
முடிந்தவரை தீபாவளிக்கு முன்னதாகவே அதனை நிறைவேற்ற முயற்சிப்பேன் எனவும் கூறினார்.
பீகாரில் ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. எனினும், அடுத்த மூன்று நாட்கள் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications