உ.பி.யில் ஐ.எஸ். தீவிரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. போலீஸ் அதிரடி வேட்டை!
போலீசாரின் அதிரடி வேட்டையில் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லக்னோ: மத்திய பிரதேச ரயில் விபத்தில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதியை உத்தரபிரதேச போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
மத்தியப்பிரதேசத்தில் போபால் - உஜ்ஜைனி பயணிகள் ரயிலில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று அந்த பெட்டியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கேட்பாரின்றி ஒரு சூட்கேஸ் கிடந்தது.
அதில் சிறிய அளவிலான வெடிகுண்டுகள் எடுத்து வந்ததற்கான தடயம் சிக்கியது. இதையடுத்து, புலனாய்வு துறையினரின் உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் ரயிலில் குண்டு வைத்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்தேகிக்கப்படுகிற ஒருவர் உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் கைது செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய மற்றொருவர், ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதி என சந்தேகிக்கப்படுகிற முகமது சைபுல் என தெரிய வந்துள்ளது. லக்னோ நகரில் கஞ்ச் குடியிருப்பு பகுதியின் ஹஜி காலனியின் ஒரு வீட்டு கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தீவிரவாத தடுப்பு படை போலீஸ் கமாண்டோக்களுக்கு மத்திய புலனாய்வு முகமையிடம் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவனை உயிருடன் பிடிக்க தீவிரவாத தடுப்பு போலீஸ் கமாண்டோக்கள் சுமார் 20 பேர் நேற்று பிற்பகல் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அவனை சரணடையும் படியும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். முகமது சைபுல் தங்கியுள்ள வீட்டின் கதவையும் கதவை போலீஸ் கமாண்டோக்கள் தட்டினர்.
ஆனால் அறையின் கதவை அவன் திறக்கவில்லை. அவன் சரணடைய மறுத்ததோடு போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். அவனை வெளியே கொண்டு வருவதற்காக அந்த கட்டிடத்திற்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இது தவிர அவனை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதற்காக மிளகாய் பொடி குண்டையும் போலீசார் வீசினார்கள். இருப்பினும் அவன் வெளியே வரவில்லை. தொடர்ந்து போலீசாருக்கும் தீவிரவாதிக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் முகமது சைபுல், இரவு 8.30 மணி அளவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐ.எஸ். இயக்கத்துடன் முகமது சைபுல்லுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.