உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்... விலை உயர்வால் நுகர்வோர் கலக்கம்
டெல்லி: வெங்காய விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, ஒரு குவிண்டால் ரூ. 4,900 என்ற அளவை எட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சில்லறை விலையில் ஒரு கிலோவிற்கு 20 ரூபாய்வரை வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கலக்கமடைந்துள்ளனர்.
இந்தியாவின் முக்கிய வெங்காய சந்தையான நாசிக்கில் உள்ள லசல்கோனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், லசல்கோன் சந்தையில் இன்று ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.4,900க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை மொத்த விற்பனைச் சந்தையில் குவிண்டால் வெங்காயம் இதுவரை ரூ.4,500க்கு விற்பனையான நிலையில், இன்று விலை மேலும் உயர்ந்து ரூ.4,900க்கு விற்பனையானது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தில் மழை அளவு குறைந்ததும் வெங்காய உற்பத்தி பாதிப்புக்கு காரணமாகும். இதுதவிர குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் அறுவடை காலதாமதம் ஆவதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம்.கடந்த ஜூலை மாதத்தில் ரபி பருவ வெங்காய உற்பத்தி 28 லட்சம் டன்னில் இருந்து 14 லட்சம் டன் என பாதியாக குறைந்துவிட்டது. வெங்காயம் அறுவடை குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தாமதம் ஆவதும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ரூ.400ல் இருந்து 4900க்கு உயர்வு
நாசிக் நகர சந்தையில் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 400க்கு விற்கப்பட்ட வெங்காயம் ரூ. 4900க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் 2 வது முறையாக வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
டெல்லியில் வெங்காய விலை
டெல்லியில் வெங்காயம் கிலோ ஒன்று ரூ. 80க்கு விற்பனையாகிறது. டெல்லியில் வெங்காய விலை உயர்வுதான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. வெங்காய விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னையில் வெங்காயம்
சென்னையில் சில்லறை விலையில் சின்னவெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒருகிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வரை பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. திடீரென ஒருகிலோவிற்கு 20 ரூபாய்வரை உயர்ந்துள்ளதால் நுகர்வோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வரத்து குறைவு
கடந்த ஜூலை மாதம் வரை 3 மாநிலங்களில் இருந்து தினமும் 70 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது பல்லாரி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து 30 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் இருந்து வெறும் 20 லாரிகளில் மட்டுமே வருகிறது. வரத்து குறைவு எதிரொலியால் பல்லாரி வெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.