கொச்சு சுந்தரிகள், ஆன்லைன் விபச்சாரம்: முக்கியப் புள்ளி கைது
திருவனந்தபுரம்: ஃபேஸ்புக்கில் உள்ள கொச்சு சுந்தரிகள் பக்கத்திற்கும், ஆன்லைன் விபச்சார கும்பலுக்கும் இடையே பாலமாக இருந்த கொச்சியை சேர்ந்த ஜோஷி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்த கேரளாவை சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் உள்ளிட்டோரை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். மேலும் ஃபேஸ்புக்கில் கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் பக்கம் வைத்து அதில் சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டு வந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆன்லைன் விபச்சார கும்பலுக்கும், கொச்சு சுந்தரிகள் பக்கத்திற்கும் பாலமாக இருந்து வந்த கொச்சியை சேர்ந்த ஜோஷி என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை அவரே போலீசார் முன்பு சரண் அடைந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஃபேஸ்புக் பக்கத்தில் ஜோஷி சிறுமிகளைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் போட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். விபச்சார கும்பலுக்கும் ஜோஷிக்கும் தொடர்பு உள்ளது என்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஜோஷி தான் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சிறுமிகளை அழைத்து வந்துள்ளார்.
ஜோஷிக்கு இது தவிர பரவூர் விபச்சார வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆன்லைன் விபச்சாரத்திற்கு ஏற்பாடு செய்பவர்களில் முக்கிய நபர் ஜோஷி என்றும், கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு இது போன்ற வழக்குகளில் தொடர்புள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜோஷி பெண்கள், சிறுமிகளை விபச்சாரத்திற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.