இங்கு இந்திக்கு இடமில்லை.. ஒரே போடாகப் போட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம்
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்தியில் மனுக்களைத் தாக்கல்செய்யக் கூடாது. ஆங்கிலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என தீர்ப்பாயம் கூறியுள்ளது.
டெல்லி: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்திக்கு இடமில்லை. ஆங்கிலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தீர்ப்பாயம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விதி 33ன் கீழ், தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் அனைத்துமே ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். எனவே இங்கு இந்திக்கு இடமில்லை என்றும் தீர்ப்பாயம் சுட்டிக் காட்டியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓஜஸ்வி என்ற மதவாத கட்சி ஒன்று கடந்த 2015ம் ஆண்டு தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், கால்நடைகளை வெட்டுவதால் அதன் கழிவுகள் கலந்து யமுனை நதி மாசடைவதாகவும் அதைத் தடுத்து நிறுத்துமாறும் கோரியிருந்தது. இதுதொடர்பான மனுவை அது இந்தியில் தாக்கல் செய்திருந்தது.
இதைப் பரிசீலித்த தீர்ப்பாயம், மனு இந்தியில் உள்ளதாக கூறி டிஸ்மிஸ் செய்து விட்டது. மேலும் ஆங்கிலத்தில் மனுவை சமர்ப்பிக்குமாறும் அது அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து ஓஸ்வி கட்சி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி யு.டி. சால்வி தலைமையிலான பெஞ்ச், இந்தி தேசிய மொழி என்ற கற்பனையில் மனுதாரர் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்யக் கோரி வருகிறார்.
இந்தி தேசிய மொழி அல்ல. தீர்ப்பாயத்திலும் இந்திக்கு இடமில்லை. இங்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாகும். எனவே ஆங்கிலத்தில் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் பின்னர் தனது மனுவை இந்தியிலும் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் அதை ஏற்கிறோம். அதேசமயம், ஆங்கிலத்தில் இல்லாத பிற மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அறிவித்தனர்.