ஏதாவது அதிசயம் நடந்தால் தான் நான் தூக்கில் இருந்து தப்ப முடியும்: சிறை பாதுகாவலரிடம் கூறிய மேமன்
நாக்பூர்: ஏதாவது அதிசயம் நடந்தால் தான் தன்னை தூக்கில் இருந்து காப்பாற்ற முடியும் என்று யாகூப் மேமன் சிறை பாதுகாவலரிடம் தெரிவித்துள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் மத்திய சிறையில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். தூக்கில் இருந்து தப்பிக்க யாகூப் மேமன் செய்த அனைத்து முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று யாகூப் மேமன் சிறை பாதுகாவலரிடம் கூறுகையில், என் தூக்கை அரசியலாக்கிவிட்டார்கள். நான் இறக்கப் போகிறேன் என்று எனக்கு தெரியும். ஏதாவது அதிசயம் நடந்தால் தான் நான் தூக்கில் இருந்து தப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு கண் விழித்த மேமன் குளித்துவிட்டு அதிகாரிகள் அளித்த ஆடையை அணிந்து தொழுதுள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் குர்ஆன் ஓதியுள்ளார்.
மகளுடன் பேச வேண்டும் என்ற அவரின் கடைசி ஆசை நிறைவேறிய பிறகு மகிழ்ச்சியாக காணப்பட்டுள்ளார்.