அமர்நாத் யாத்திரை… 59 நாட்களுக்கு இந்திய ராணுவத்தின் ‘ஆபரேசன் சிவா’
ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேசன் சிவா' என்ற பாதுகாப்பு நடவடிக்கையை 59 நாட்களுக்கு ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த ஆபரேசன் சிவா திட்டம் ஜூலை 2ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 நாட்கள் யாத்திரை
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு செல்ல, ஆண்டுதோறும் ஏராளமானோர் முன்பதிவு செய்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான யாத்திரை, ஜூலை 2ம் தேதி துவங்கி, 59 நாட்களுக்குப் பின் நிறைவடைகிறது.

1.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக 1.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அமர்நாத் கோவிலின் அடிவாரத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படும் பயணிகள், பலத்த பாதுகாப்புடன், மலை மேல் உள்ள சிவன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
ஆபரேசன் சிவா
பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவம் ஆபரேசன் சிவா என்ற திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்க உள்ளது ஜூலை 2ஆம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை முடிவடையும் 59 நாட்களும் ஆபரேசன் சிவா செயல்பாட்டில் இருக்கும்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல்
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இதுவரை எந்தவித தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை எனினும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக இந்தத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக லெட்டினெட் ஜெனரல் சுபத்ராசகா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வனப்பகுதிகளில் பாதுகாப்பு
வனப்பகுதிகளில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக, சந்தன்வாரி, பால்தல் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
பள்ளத்தாக்கு பகுதிகளிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் தேவையான மாறுதல்கள் செய்யப்படும் என்றும் லெப்டினெட் ஜெனரல் சகா கூறியுள்ளார்.
8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
கடந்த சனிக்கிழமையன்று அமர்நாத் யாத்திரை செல்லும் பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சகா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications