பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ராஜஸ்தானை தட்டி தூக்கும் காங்கிரஸ்! வெளியான கருத்துக்கணிப்பு
ஜெய்பூர்: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. குறிப்பாக சத்தீஸ்கரில் காங்கிரஸ் வலுவான வெற்றியை பெற்றது. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நூலிழையிலேயே காங்கிரஸ் வென்றது.

ஆனால், பாஜகவின் ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி 2 ஆண்டுகளில் கவிழ்ந்தது. முதலமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார். அதை தொடர்ந்து அங்கு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டது. பல முறை சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினாலும், காங்கிரஸ் தேசிய தலைமையின் தலையீடு காரணமாக ஆட்சி கவிழாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளார்கள். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தற்போதே பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கி இருக்கின்றன. அதேபோல் பல்வேறு ஊடகங்கள் தனியார் ஆய்வு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை எடுத்து வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் ஸ்மால் பாக்ஸ் இந்தியா என்ற அமைப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளது. இது தொடர்பாக 23 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமாக 104 தொகுதிகளை பெற்று ஆட்சியமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 90 தொகுதிகளிலும், இதர கட்சிகளில் 6 இடங்களில் வெற்றிபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில் இன்று தேர்தல் நடத்தப்பட்டால் இந்த முடிவுகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தேர்தல் நெருங்கும் சமயங்களில் இந்த முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.












Click it and Unblock the Notifications