புல்வாமா தியாகிகளின் படத்தை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதா.. மோடிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
தியாகிகளை வைத்து அரசியல் லாபம் தேடுவதா என மோடிக்கு கண்டனம் எழுந்துள்ளது.
Recommended Video
ஜெய்ப்பூர்: இறந்த வீரர்களின் படங்களை வைத்து கொண்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து அரசியல் லாபம் தேடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்ட ஆரம்பித்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, யாரிடமும் இந்தியா அடிபணியாது, நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.
பாதுகாப்பாக உள்ளது
மேலும் இந்தியாவை யாரும் மிரட்டவும் அனுமதிக்கவே மாட்டோம் என்று சூளுரைத்த பிரதமர், முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு தலைவணங்குவதாகவும், நம் நாடு மிகவும் பாதுகாப்பாகத்தான் உள்ளதாகவும் உறுதி சொன்னார்.
முக்கியத்துவம்
40 வீரர்களின் உயிரை பறித்ததற்கு 300 பேரை காவு வாங்கி இந்தியா பழி தீர்த்து கொண்ட நிலையில், பிரதமர் வீரர்களிடம் இன்று இந்த கூட்டத்தில் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்னொருபுறம் பாஜக கூட்டணிகளுக்கு வெற்றி சமாச்சாரமாக இது கருதப்படுகிறது. எனவேதான் இதே கூட்டத்தை வைத்து எதிர்க்கட்சிகள் தாறுமாறு விமர்சனத்தில் இறங்கிவிட்டது.
புகைப்படங்கள்
இந்த கூட்டத்தில், பிரதமருக்கு பின்புறம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களை நினைவுகூறும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் வரிசையாக மாட்டி வைக்கப்பட்டிருந்தது. புல்வாமா தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று மோடி கேட்டுக் கொண்டாலும், அதைதான் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
பிரச்சாரம்
தாக்குதலில் இறந்தவர்களின் படத்துடன் பிரசாரம் செய்கிறார் என்றும் ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.