சரக்கு, சேவை வரி மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு- நிலைக்குழுவுக்கு அனுப்ப சபாநாயகர் மறுப்பு!!
டெல்லி: சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற லோக்சபாவில் அண்ணா தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
மத்திய, மாநில அரசுகள் வசூலித்து வரும் பல்வேறு வகையான வரிகளுக்கு மாற்றாக, சரக்கு, சேவை வரி என்ற ஒரே வரியை அமல்படுத்துவதற்காக சரக்கு, சேவை வரி மசோதாவை (ஜி.எஸ்.டி) மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இந்த மசோதா, நேற்று லோக்சபாவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. அப்போது காங்கிரஸ், அ.தி.மு.க, பிஜு ஜனதாதளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அ.தி.மு.க. எம்.பி. பி.வேணுகோபால் பேசுகையில், இந்த மசோதா, பல்வேறு முரண்பாடுகளைக்கொண்டது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. ஆகவே, இதை அ.தி.மு.க. எதிர்க்கிறது என்றார்.
மேலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்புமாறு வலியுறுத்தினர். இதனை நிராகரித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சரக்கு, சேவை வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். எனவே, இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பினால், மாநில அரசுகளுக்கு இந்த வரியால் கிடைக்க வேண்டிய பலன்கள், இன்னும் ஓராண்டு தள்ளிப்போகும். இந்த மசோதாவை தாமதப்படுத்துவதால், எந்த நன்மையும் இல்லை. மாநிலங்கள்தான் பொருளாதாரரீதியாக பாதிக்கப்படும் என்றார்.
அருண் ஜெட்லியின் வேண்டுகோளை ஏற்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மசோதாவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் இம்மசோதா நேற்றே லோக்சபாவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications