எடப்பாடி அணி டிடிவி தினகரனை நீக்கியது எங்களுக்கே சாதகம் - கே.பி. முனுசாமி
தங்கள் அணி தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி இன்று தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: டிடிவி தினகரனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அணி நிறைவேற்றிய தீர்மானத்தால் எங்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று ஓபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
அதிமுக தற்போது பல அணிகளாக பிளவுபட்டுள்ளது. ஆர். கே. நகர் இடைத்தேர்தலின் போது தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று அதிமுக சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் மல்லுக்கட்டின. இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வேண்டும் என்றும் இரு அணிகளும் கோரிக்கை வைக்கவே, சின்னமும், கட்சியும் முடக்கப்பட்டது.
சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் மாறி மாறி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் சசிகலா அணியும் இரண்டாக பிளவுபட்டுள்ளது. டிடிவி தினகரன் நியமனம் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் புதிய மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் தங்கள் அணி தான் உண்மையான அதிமுக என்று மனுவில் ஓ.பி.எஸ். தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
தினகரனை நீக்கி எடப்பாடி அணி நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் புதிய மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, தங்களின் அணிக்கு வலுசேர்க்கும் வகையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தினகரன் நியமனம் செல்லாது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.