இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் கோஷ்டி கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை ஓபிஎஸ் அணியினர் இன்று தாக்கல் செய்தனர்.
டெல்லி: இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை ஓபிஎஸ் அணியினர் இன்று தாக்கல் செய்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியயிட இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடியதால் தேர்தல் ஆணையத்தை நாடினர்.
இந்நிலையில் இரு தரப்பையும் அழைத்து டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மார்ச் 22-இல் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்குவதாக அறிவித்தது.
இரு தரப்பையும் ஏப்ரல் 17-ம் தேதிக்குள் கட்சியில் உள்ள ஆதரவு தொடர்பான கூடுதல் ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று இரு அணிகளாக தொப்பி, இரட்டை மின் விளக்கு ஆகிய சின்னங்களில் முறையே வேட்புமனு தாக்கல் செய்தனர். எனினும் பணப்பட்டுவாடா காரணமாக அந்த தேர்தல் ரத்தானது.
கால அவகாசம் வேண்டும்
இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 17-ஆம் தேதி ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், அதிமுக அம்மா கட்சி சார்பில், 8 வாரம் காலஅவகாசம் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது.அது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவிக்கவில்லை. அதன்பின், ஏப்ரல் 17-ம் தேதி இரு தரப்பினரும் ஆஜராகினர்.
ஜூன் 16-க்குள் சமர்ப்பிக்க...
அப்போது, சசிகலா தரப்பு அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தது. ஆனால், ஓபிஎஸ் தரப்பு 9 ஆயிரத்து 110 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தது. எனினும் இந்த அணியும் கால அவகாசம் கேட்டது. இருதரப்பும் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கக் கால அவகாசத்தை நீட்டிக்க ஆணையம் முடிவெடுத்திருப்பதாகவும், வரும் ஜூன் 16-ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இணைப்பு
இதனிடையே மதுரையில் பேசிய ஓபிஎஸ், அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை பச்சைக் கொடி காட்டினார். அதற்கான கண்ணாமூச்சி ஆட்டங்களை இரு அணிகளும் ஆடி கொண்டிருந்தன. மேலும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை திரும்ப பெற வேண்டும் என்று மாறி மாறி கேட்டுக் கொண்டன.
இன்று ஆவணங்கள் தாக்கல்
இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்த எஸ்.எம்.எஸ். மூலம் எடப்பாடி அணியினர் அழைப்பு விடுத்தது குறித்து ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் எழுந்துள்ளதாக அவர் கூறினார். இதனால் அதிமுக இணைப்பு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஒரு முடிவுக்கு வந்த நிலையில், தற்போது தங்களுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசத்துக்குள் இன்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் 6,500 பக்கங்கள் கொண்ட கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக இணையுமா?
அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆவணங்கள் தாக்கல் செய்ய இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில் இவ்வாறு அவசர அவசரமாக ஓபிஎஸ் அணியினர் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.