சசிகலாவிற்கு எதிர்ப்பு - தலைமைத் தேர்தல் ஆணையருடன் மைத்ரேயன் எம்.பி சந்திப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை ராஜ்யசபா எம்.பி மைத்ரேயன் இன்று ஓபிஎஸ் ஆதரவு எம்.பிக்களுடன் டெல்லியில் சந்தித்து பேசினார்.
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை டெல்லியில் ராஜ்யசபா எம்.பி மைத்ரேயன் நேரில் சந்தித்து பேசினார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து மைத்ரேயன் தேர்தல் ஆணையரை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் போட்டுத்தான் அவரை பொதுச்செயலாளராக நியமனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்துள்ளது.
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன், பொன்னையன் உள்ளிட்ட அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார். ஆனால் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவினால் தங்களை நீக்க முடியாது என்று கூறி வருகின்றனர். அவர் தற்காலிக பொதுச்செயலாளர்தான் என்று அவைத்தலைவர் மதுசூதனன், பொன்னையன், பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார். அவர் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்துள்ளார். இந்த நிலையில் இன்று ராஜ்யசபா எம்.பி மைத்ரேயன் தலைமையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பிக்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை டெல்லியில் சந்தித்து பேசினார்.