ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை... ஜனாதிபதியிடம் ஓ.பி.எஸ் அணி எம்.பிக்கள் நேரில் வலியுறுத்தல்
டெல்லி: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் அது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்தனர்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கட்சியை கைப்பற்றிய சசிகலா ஆட்சியை பிடிக்கவும் முற்பட்டார். அதன் விளைவாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன் பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் சசிகலா தரப்பு தன்னை வற்புறுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கோரிக்கை விடுத்தார் பன்னீர்செல்வம்.
இந்நிலையில் மைத்ரேயன் தலைமையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் 12 பேர் டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக சட்டசபையில் நடந்த விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பிரணாபிடம் தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில் இன்று 12 எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications