போலாவரம் திட்ட அவசர சட்டத்துக்கு தெலுங்கானா, ஒடிஷா எதிர்ப்பு!
டெல்லி: போலாவரம் திட்டத்தை நிறைவேற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு தெலுங்கானா மற்றும் ஒடிஷா மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆந்திராவில் மழைக்காலங்களில் கோதாவரி ஆற்றுக்கு வரும் அதிகப்படியான வெள்ள நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் அந்த தண்ணீரை சேமிப்பதற்காக போலாவரம் அணைத்திட்டத்தை கம்மம்-கோதாவரி மாவட்டத்தில் நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
இந்த அணை திட்டத்தின் போது நீரில் மூழ்கி விடும் பகுதிகளான கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்கள் சீமாந்திராவில் இணைக்க வகை செய்து மத்திய அரசு தற்போது அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
ஏற்கனே இந்த திட்டத்துக்கு ஒடிஷா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இத்திட்டத்தை நிறைவேற்றினால் ஒடிஷா, சத்தீஸ்கர் மாநில பழங்குடி இன கிராமங்கள் மூழ்கும் அபாயம் இருக்கிறது என்பது அந்த அரசுகளின் கவலை.
இந்நிலையில் போலாவரம் அணை மற்றும் நீர் மின்திட்டம் உள்ளிட்ட பன்னோக்கு திட்டத்துக்காக ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டல கிராமங்கள் சீமாந்திரா பகுதியில் இணைக்கப்பட்டன. இதற்கான அவசர சட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தனர்.
தெலுங்கானா பகுதியில் உள்ள 200 கிராமங்கள் சீமாந்திரா பகுதிக்கு மாற்றப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள 2.4 லட்சம் பழங்குடியினர் பாதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. பழங்குடியினரை எப்படி காப்பாற்ற போகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும் என்று அக் கட்சியின் முன்னணி தலைவரான கேசவ்ராவ் எம்.பி. கூறினார்.
ஒடிஷா முதல்வர்
இதனிடையே டெல்லியில் முகாமிட்டுள்ள ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.