ராமர் நம்மை மன்னிப்பார்.. இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது: அயோத்தியில் பிரதமர் மோடி பேச்சு
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். ஏராளமான தியாகங்களுக்குப் பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது, இன்று இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்துள்ளனர்.

இன்று காலை 11.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்தார். பட்டாடைகளை பாரம்பரிய முறைப்படி அணிந்து வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் கருவறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில் பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்களின் வழிகாட்டுதலின் படி பிரதமர் மோடி, மோகன் பகவத், ஆனந்திபென் படேல், யோகி ஆதித்யாநாத் ஆகியார் பூஜைகளை செய்தனர். கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
ஆரத்தி காண்பிக்கப்பட்டதை அடுத்து, ஆலயத்தில் இருந்த ஆன்மிகப் பெரியவர்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். அப்போது அவர்களுக்கு புத்தாடையும், மோதிரமும் பிரதமர் மோடி பரிசளித்தார். குழந்தை ராமரை தரிசித்த பிரதமர் மோடி உள்ளிட்டோர் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பைத் தொடர்ந்து, குவிந்திருந்த பக்தர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய மோடி, "ராமர் இனி ஒருநாளும் கொட்டகையில் இருக்க மாட்டார், இனி கோயில் கருவறையினுள் இருப்பார். ராமரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஏராளமான தியாகங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலம் இன்று இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. ராமர் என்பது பிரச்னை அல்ல தீர்வு. இந்தியா இன்றுதான் தீபாவளியை கொண்டாடுகிறது. யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல. கண்ணியமாக கிடைத்த வெற்றி. கரசேவகர்களுக்கும், கோவில் கட்ட வழிவகை செய்த நீதித்துறைக்கும் நன்றி.
ராமர் ஆலயம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கான ஆலயம், நமக்கு உத்வேகம் அளிக்க இந்த கோவில் உதவும். ராமபிரான் அனைவருக்கும் பொதுவானவர். எண்ணற்ற தியாகங்களுக்கு பின் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நமது தியானத்தில் குறைபாடு இருந்தன. கோயில் கட்டுவதற்கு ஏற்பட்ட தாமதத்திற்கு ராமரிடம் மன்னிப்பு கோருகிறேன். ராமருக்கு தாமதமாக கோவில் கட்டிவிட்டோம். ராமர் நம்மை மன்னிப்பார் என நம்புவோம்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications