இமாச்சலில் பனிப்பொழிவால் சிக்கிய 1000+ வாகனங்கள்.. ஆனாலும் சுற்றுலா பயணிகள் ஹேப்பி! ஏன் தெரியுமா
மணாலி: இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் கடுமையான பனிப் பொழிவு காரணமாக அங்குப் பல நூறு வாகனங்கள் டிராபிக்கில் சிக்கியுள்ளன. இதனால் அங்குப் பல ஆயிரம் வாகனங்கள் சாலையிலேயே மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அந்த சில் கிளைமேட்டை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக என்ஜாய் செய்தே வருகிறார்கள்.
வடமாநிலங்களில் இப்போது கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. ஏற்கனவே அங்கு சில பகுதிகளில் கிட்டதட்ட ஜீரோ டிரிகி செல்சியஸுக்கு கூட வெப்பம் போய்விட்டது.

இமாசல பிரதேச பனிப்பொழிவு:
இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளில் ஒன்றான மணாலியில் இப்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குப் பல முக்கிய சுற்றுலா தலங்களிலும் டிராபிக் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. சோலாங் மற்றும் அடல் டனல், ரோஹ்தாங் எனப் பிரபல சுற்றுலா தலங்கள் செல்லும் வழிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
1000 வாகனங்கள்:
பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட டிராபிக் நெரிசலில் சுமார் 1,000 வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் இதுவரை சுமார் 700 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பனிப்பொழிவு தொடரும் நிலையில், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு போலீசார் உதவும் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பனிப்பொழிவு மிகக் கடுமையாக இருக்கும் நிலையில், உள்ளூர் அதிகாரிகள் தான் இப்போது மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
மகிழ்ச்சி:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடப் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் அங்குக் குவிந்துள்ள சூழலில் இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அங்கு முதலில் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு வாரங்கள் எந்தவொரு பனிப்பொழிவும் இல்லாத நிலையில், இப்போது மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
அதேநேரம் இந்த பனிப்பொழிவு சுற்றுலாப் பயணிகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது போலவே தெரிகிறது. முதலில் விடுமுறையை முடித்துக் கொண்டு கிளம்பத் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் கூடக் கூடுதலாக சில நாட்கள் அங்கேயே தங்க முடிவு செய்துள்ளனர். கிறிஸ்துமஸ் நாளை இதுபோன்ற பனிபடர்ந்த இடத்தில் கொண்டாடுவது அரிதானது என்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கேயே தங்கிக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் ஹேப்பி:
இது அங்குள்ள உள்ளூர் வணிகங்கள், ஹோட்டல் உள்ளிட்ட சுற்றுலாவை நம்பி இருப்போருக்கு மகிழ்ச்சியையே தருவதாக இருக்கிறது. ஏனென்றால் இமாச்சல பிரதேசம் என்பது முழுக்க முழுக்க சுற்றுலாத் துறையையே நம்பி இருக்கும் ஒரு பகுதியாகும். கொரோனா காரணமாக இமாச்சல பிரதேச சுற்றுலா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் இதுபோன்ற காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் இமாச்சலில் அதிக நாட்கள் தங்குவது பொருளாதாரத்தை மீட்க உதவும் என்றே கூறப்படுகிறது.
இதுபோல வேறு எங்கும் பார்க்க முடியாது என்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட வந்த சுற்றுப் பயணிகள் பலரும் புத்தாண்டு வரை இங்கேயே இருக்க முடிவு செய்துள்ளனர். பனிப்பொழிவு காரணமாக வெளியே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்ற போதிலும் பனியின் அழகைச் சுற்றுலாப் பயணிகள் ரசித்தே வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications