ஹரியானாவில் அங்கீகாரம் இல்லாத 1200 தனியார் பள்ளிகள் மூடல்: அரசு உத்தரவு
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பல வருடங்களாக மாநிலக் கல்வித்துறையின் அங்கீகாரம் இல்லாமல் நடைபெற்று வரும் 1,200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை ஒரு வாரத்திற்குள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி நிர்வாக இயக்குனரான சந்தர் சேகர் தனது சமீபத்திய சுற்றறிக்கை ஒன்றில் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு இந்த உத்தரவினை வழங்கியுள்ளார்.
இந்தப் பள்ளிகளை மூடுவதற்கு உள்ளூர் அரசு நிர்வாகம் அல்லது காவல்துறையின் உதவியையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பள்ளிகளில் அங்கீகாரம் பெறுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளோ, ஊழியர்களோ இல்லாததினால் அவர்கள் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளவில்லை. இந்த நடவடிக்கை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பள்ளிகளுக்கு முறைப்படி அங்கீகாரம் பெற்றுக்கொள்ளத் தேவையான பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் அதற்கு முன்வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கல்வி ஆண்டின் இடையில் இந்தப் பள்ளிகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் அனுமதி வழங்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அரசின் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளிகளை மூடும் நடவடிக்கையால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். இந்தப் பள்ளிகள் தங்களுடைய மாணவர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்ததில்லை என்பதே அதற்குக் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என்று தாங்கள் முன்னரே பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications