ரூ. 20,000 கட்டணம் செலுத்தி கெஜ்ரிவாலுடன் டின்னர் சாப்பிட்ட 200 பேர்
பெங்களூர்: ஆம் ஆத்மி கட்சியின் கட்டணத்துடன் கூடிய இரவு விருந்து நேற்று பெங்களூரில் கோலாகலமாக நடந்தது.
200 க்கும் மேற்பட்டோர் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுடன் டின்னர் விருந்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் தலா ரூ.20,000 கட்டணம் செலுத்தி இந்த விருந்தில் பங்கு கொண்டனர்.
பெங்களூரில் உள்ள கேபிடல் ஹோட்டலில் இந்த நிதி சேகரிப்பு இரவு விருந்து நடந்தது.
அமெரிக்க பாணியில் இந்த நிதி சேகரிப்பு விருந்தை ஆம் ஆத்மி கட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியின் இணையதள ஆதரவு பிரிவான வெல் விஷர்ஸ் ஆப் ஆம் ஆத்மி ஏற்பாடு செய்திருந்தது.
மொத்தம் 30 டேபிள்கள் போடப்பட்டு டேபிளுக்கு 10 பேர் வீதம் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்தில் மது பரிமாறப்படவில்லை. சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்தின் மூலம் ஆம் ஆத்மிக்கு ரு. 40 லட்சம் நிதி சேர்ந்ததாக கூறப்படுகிறது.
விருந்து குறித்து பெங்களூர் மத்திய தொகுதி வேட்பாளரும், முன்னாள் இன்போசிஸ் அதிகாரியுமான பாலகிருஷ்ணன் கூறுகையில், கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட்டது குறித்து பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இது ஒரு நல்ல நிகழ்வாக அமைந்தது என்றார்.
விருந்தில் கலந்து கொண்டவர்கள் பல கேள்விகளை கெஜ்ரிவாலிடம் கேட்டதாகவும், அனைத்துக்கும் கெஜ்ரிவால் நேரடியாக பதிலளித்தார் என்றும் எடுஸ்போர்ட்ஸ் நிறுவன சிஓஓ ஜோதி தெரிவித்தார்.
விருந்தில் கலந்து கொண்ட பலர் கெஜ்ரிவால் தேர்தலில் எங்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று கேட்டதாகவும், அதுகுறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கெஜ்ரிவால் பதிலளித்தாராம்.