முன்னாள் எம்.பி.க்கள் வசித்து வரும் அரசு பங்களாவின் வாடகை பாக்கி எவ்வளவு தெரியுமா ?
டெல்லி: முன்னாள் எம்.பி.க்கள் வசித்து வரும் அரசு பங்களாவின் வாடகை பாக்கி மட்டும் ரூ.93 லட்சம் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
மக்களவை, மாநிலங்களவைக்கு உறுப்பினர்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு சார்பில் பங்களா ஒதுக்கப்படும். அவர்கள் பதவிக் காலம் முடிவடைந்த உடன் அந்த பங்களாவை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் எம்பிக்களுக்கான குடியிருப்பை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள எஸ்டேட் இயக்ககத்தின் "ஹவுஸ் கமிட்டி' ஒதுக்கீடு செய்யும்.

இந்நிலையில் ஏராளமான முன்னாள் எம்.பி.க்கள் வசித்து வரும் அரசு பங்களாவின் வாடகை பாக்கி மட்டும் ரூ.93 லட்சம் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. இதில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியவருமான கிரீஷ் குமார் சாங்கியின் வாடகை பாக்கி மட்டும் ரூ.23 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, எஸ்டேட் இயக்குநரகத்தின் ஆவணங்களில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கொடுத்த மனு மீது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சாங்கியிடம் கேட்ட போது, 2010ம் ஆண்டு எனது பதவிக் காலம் நிறைவடைந்ததுமே எண் 7, தல்கடோரா சாலையில் உள்ள அரசு பங்களாவை நான் காலி செய்துவிட்டேன். அதன் பிறகு அது வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், என் பெயரில்தான் இன்னும் வாடகைப் பாக்கிக் காட்டப்படுகிறது. நான் அதில் குடியிருந்தால் நிச்சயம் வாடகை செலுத்தியிருப்பேன்.
வேறு யாரோ அதில் குடியிருப்பதால் நான் செலுத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியாக சுமார் 56 முன்னாள் எம்.பி.க்கள் ரூ.1,969 முதல் ரூ.23.07 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications