பிரதமர் வேட்பாளராக மோடி... அத்வானியை ஏற்க வைக்க கத்காரி மும்முரம்! சுஷ்மா, எம்.எம். ஜோஷி ஒப்புதல்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்க அக்கட்சி முடிவு செய்துவிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து முட்டுக்கட்டை போட்டு வரும் மூத்த தலைவர் அத்வானியை சமாதானப்படுத்த ஆர்.எஸ்.எஸ். தூதராக நிதின் கத்காரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தீர்மானித்தது. ஆனால் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி எதிர்ப்பாளர்களை தனித்தனியே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளில் சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சமாதனமடைந்ததாக தெரிகிறது.

அத்வானி மட்டுமே தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை ஆர்.எஸ்.எஸ். தமது தூதராக அனுப்பி வைத்தது. அவரும் அத்வானியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று மீண்டும் நாக்பூரில் இருந்து டெல்லி திரும்பி அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதேபோல் மோடியின் சட்ட ஆலோசகராக வருணிக்கப்படும் அருண்ஜேட்லியும் இன்று அத்வானியை சந்தித்து பேசக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால், குஜராத் முதல்வர் பதவி, பாஜகவின் லோக்சபா பிரசார குழுத் தலைவர் பதவி ஆகியவற்றை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மோடி எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துவதாக தெரிகிறது.
அனேகமாக அத்வானி சமாதானமடையாமல் போனாலும் அவரது எதிர்ப்பை மீறி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவதற்கு அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா வாழ்த்து தெரிவித்துள்ளது. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications