"படையப்பா"வுக்கு இதே வேலைதான்.. டார்கெட் விஜயலட்சுமி அரிசி கடை.. 9-வது முறை அட்டாக்- அலறும் மூணாறு!
மூணாறு: கேரளாவின் மூணாறு பகுதியில் "படையப்பா" யானை விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான அரிசி கடையை 9-வது முறையாக தாக்கியது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்னர் அரிசி கொம்பன் என்ற அரி கொம்பன் யானை பெரும் அட்டூழியம் செய்தது. 10 பேரை மிதித்து கொன்ற அரிசி கொம்பன் தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்தது. இதனால் கம்பம் நகரில் 144 தடை உத்தரவு போடும் நிலைமை வந்தது. ஒருவழியாக அரிசி கொம்பன் பிடிகப்பட்டு களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.

அப்போது "படையப்பா" யானையும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. மூணாறு சொக்கநாடு வனப்பகுதியில் வலம் வந்த "படையப்பா" உண்ணி மேரி என்பவரது அரிசி கடையை பதம் பார்ப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தது. உண்ணி மேரியின் அரிசி கடை மீது 20 முறை தாக்குதல் நடத்தியது படையப்பா. இதன் பின்னர் படையப்பா பற்றிய பேச்சு எழவில்லை.
தற்போது மீண்டும் 'படையப்பா' சீனில் வந்துள்ளார். மூணாறு லக்காட் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் விஜயலட்சுமி என்பவரது அரிசி கடையை துவம்சம் செய்து 2 மூட்டை அரிசியை காலி செய்துள்ளார் படையப்பா. விஜயலட்சுமி அரிசி கடை மீது படையப்பா யானை தாக்குதல் நடத்துவது 9-வது முறையாம். வீட்டை முற்றுகையிட்ட படையப்பா யானையிடம் இருந்து பின்வாசல் வழியாக குடும்பத்தினர் தப்பிச் சென்றிருக்கின்றனர். இல்லையெனில் அவர்களையும் துவம்சம் செய்திருப்பாராம் படையப்பா. அரிசி கடையை மட்டுமின்றி அப்பகுதி குடிநீர் குழாய்களையும் மிதித்து விளையாடிவிட்டு போயிருக்கிறார் படையப்பா சார்.
முன்னதாக தேவிகுளம் பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்.அதே போல கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் அசையாமல் நின்று பொதுமக்களிடம் சேட்டையை காண்பித்து வந்தவர்தான் இந்த படையப்பா. தற்போது லக்கட் எஸ்டேட் வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் 'படையப்பரை' வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனராம். 'படையப்பா' யானையின் இந்த தொடர் தாக்குதலால் லக்கட் எஸ்டேட் மக்கள் பெரும் அச்சத்திலும் பீதியிலுமாக உறைந்து போயிருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications