பேச்சுவார்த்தையில் பிரச்சினையை கிளப்புகிறது பாகிஸ்தான்: சுஷ்மா குற்றச்சாட்டு
டெல்லி: ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் திட்டத்துடன் பாகிஸ்தான் செயல்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்திட விரும்பாமல் பாகிஸ்தான் விலகுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் எப்பொழுதும் காஷ்மீர் பிரச்னையை பற்றியே பேசுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு நடைபெறுவது சந்தேகமே என்ற நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார்.
பாகிஸ்தான் முட்டுக்கட்டை
அப்போது அவர், இந்த விவகாரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் திட்டத்துடன் பாகிஸ்தான் செயல்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்திட விரும்பாமல் பாகிஸ்தான் விலகுகிறது.
உடன்படாத பாகிஸ்தான்
வாஜ்பாய் அரசாங்த்தால் 8 முக்கிய புள்ளிகள் இந்தியா,பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு மூலம் தீர்வு காண கண்டறியப்பட்டது. ஆனால் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஒருபோதும் உடன்படுவதில்லை என அவர் கூறினார்.
உஃபா உடன்படிக்கை
தீவிரவாதம் பற்றி பேச்சு நடத்தலாம் என உஃபாவில் இரு நாடுகளும் முடிவெடுத்தன ஆனால் உஃபா உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் செயல்படுகிறது. மேலும் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய கருத்துகள் அனைத்தும் இரு நாட்டு ஆணையர்கள் இடையே முடிவு செய்யப்பட்டது, இப்போது இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் மூன்றாவது நபர் வருவதை நாங்கள் விரும்பவில்லை.
காஷ்மீர் விவகாரம்
அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேச நாங்கள் தயாராக இருக்கின்றோம், காஷ்மீர் விவகாரம் உள்பட. அதற்கான சூழ்நிலையை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். ஆனால் இப்போது நடைபெறும் கூட்டம் அதற்கானது அல்ல.
இந்தியா அனுமதிக்காது
சர்தாஜ் அஜீஸை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் பிரிவினை வாத தலைவர்களை தேவையில்லாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த முயற்சி செய்யாதீர்கள். இதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.
இந்தியா பற்றிய கோப்பு
சர்தாஜ் அஜீஸிடம் இந்தியா பற்றி கோப்புகள் தான் இருக்கிறது. ஆனால் நம்மிடம் பாகிஸ்தான் தீவிரவாதி முஹம்மது நவீத் இருக்கின்றான். இந்தியா- பாக் இடையேயான பேச்சுவார்த்தை தடைபடுவதற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசர் சர்தாஜ் ஆஸிஸ் கூறியது வருத்தம் அளிக்கிறது.
பேச்சுவார்த்தை ரத்தாகும்
பாகிஸ்தானிற்கு இன்று இரவு வரை நேரம் இருக்கிறது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை உஃபா உடன்படிக்கை மற்றும் சிம்லா ஒப்பந்தம் பற்றியே இருக்க வேண்டும், இல்லையென்றால் பேச்சு வார்த்தை ரத்து செய்யப்படும் என சுஷ்மா திட்டவட்டமாக கூறினார்.