வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய வீரர் கைது! நாளை ஒப்படைக்கிறது பாகிஸ்தான்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்திய, எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்து வைத்துள்ளனர்.
அவரை தற்போது ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் மார்க்கிவாலா முகாமில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அவரை நாளை விடுவிப்பாக பாகி்ஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே இருநாட்டு வீரர்களும் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த 6 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஜம்முவில் உள்ள செனாப் ஆற்றில் படகில் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் சென்ற படகு திடீரென பழுதானது.
அப்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக படகு கவிழ்ந்தது. படகில் இருந்த 6 வீரர்களில் 5 பேர் ஆற்றில் குதித்து தப்பித்தனர். சத்யஷீல் யாதவ் என்ற வீரர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற அந்த வீரரை, கிராமத்தினர் சிலர் பார்த்து மீட்டனர்.
அவர் இந்தியர் என்று தெரிய வந்ததும், பின்னர் அவரை பாகிஸ்தான் ரேஞ்சர் படையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் அவர் மார்க்கிவாலா முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து அவரை தங்களிடம் ஒப்படைப்பதற்காக எல்லையில் கொடி சந்திப்பு நடத்த வேண்டும் என இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அழைப்பு விடுத்திருந்தது. இதுதொடர்பாக ஒரு சந்திப்பும் நடந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் கூறுகையில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் நல்லமுறையில் கவனிக்கப்பட்டு வருகிறார் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அவரால் பாகிஸ்தான் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை, அவர் ஊடுறுவல் நோக்கத்தோடு வரவில்லை, அவர் தெரியாமல்தான் வந்தார் என்பது உறுதியானதும் அவர் விடுவிக்கப்படுவார் என்றார் அவர்.
இதனிடையே தனது மகனை பாகிஸ்தான் ரேஞ்சர் படை கடத்தி கைது செய்து வைத்திருப்பதாக சத்யஷீல் யாதவின் தந்தை புகார் கூறியுள்ளார்.
பிடிபட்டுள்ள யாதவ் நாளை விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்று இந்திய ராணுவத் தரப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications